உத்தரப் பிரதேசத்தில் நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் வியாபாரி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காஸியாபாத் அருகே உள்ள லோனி என்ற பகுதியில் கோவிந்த் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பூக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்னதாக அஜய் என்பவர் கோவிந்தின் கடை எதிரே ஒரு பூக்கடையை புதிதாக திறந்துள்ளார்.
இதனால் கோவிந்துக்கும் அஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவரும் போலீசை அணுகி தங்களது பிரச்னையை தீர்த்துக் கொண்டனர்.
இந்நிலையில் கோவிந்துக்கும் அஜய்க்கும் இடையே மீண்டும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி காவல் நிலையத்தில் அஜய் புகார் கூறியதால் ஆத்திரமடைந்த கோவிந்த், தனது நண்பருடன் சேர்ந்து அவரை நடுரோட்டில் எஃகு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து படுகாயமடைந்த அஜயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அஜயை நடுரோட்டில் அடித்துக் கொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருவர் அஜயின் தலையில் எஃகு கம்பியால் பல முறை அடிப்பதைக் காண முடிகிறது. துடித்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞரை காப்பாற்ற பொதுமக்கள் எவரும் முன்வரவில்லை.
இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்கள், தாக்குதலை தடுத்தி நிறுத்தியிருந்தால் அஜய்யை காப்பாற்றியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.