அவிநாசியில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை அவரது தாயே கொலை செய்ய முயற்சித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த தண்டுக்காரன்பாளையத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பெண் ஒருவர் அக்குழந்தையை விட்டுச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறியதை அடுத்து காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண், தான் கொண்டுவந்த பைகளை அப்பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
அந்தப் பையில் பெங்களூருவில் உள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்கியதற்கான ரசீது இருந்தது. அதனைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய போது, அந்த பெண் நல்ல உடல்நிலையுடன் இருந்த தனது குழந்தையுடன் பொருட்கள் வாங்கியதை கடைக்காரர் உறுதி செய்தார். மேலும் கடைசியின் சிசிடிவி காட்சிகளை போட்டோவாக எடுத்து திருப்பூர் போலீஸாருக்கு அனுப்பினார். இதனிடையே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் உளவுவதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண்தான் குழந்தையை விட்டுச் சென்றவர் என தெரியவந்தது. அவர் பெயர் சைலஜாகுமாரி. பெங்களூருவை சேர்ந்த அவர் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மருத்துவ தொழில் பாதிக்கப்பட்டதால் வேலை தேடி திருப்பூர் வந்ததாக கூறப்படுகிறது. மைசூரு வந்து அங்கிருந்து சத்தியமங்கலம் வழியாக திருப்பூர் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்கு ஒவ்வாமை காரணமாக வாந்தி வந்ததால் தண்டுக்காரன்பாளையத்தில் பேருந்தை நிறுத்தி இறங்கியுள்ளார்.
<iframe width=”640″ height=”360″ src=”https://www.youtube.com/embed/Xt_FzP5XEys” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
அப்போது மேலும் மன உளைச்சல் அடைந்த சைலஜாகுமாரி சளிக்கு கொடுக்கும் சிரப்பை தனது மகளுக்கு ஒரு பாட்டில் முழுவதும் கொடுத்துள்ளார். மயக்கமடைந்த மகளை அப்பகுதியில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து, சைலஜாகுமாரியை போலீசார் கைது செய்தனர். அப்போது, தான் எலி மருந்தை சாப்பிட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கொரோனா காலத்தில் மருத்துவரான தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று அப்பெண் கூறியுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.