புதுக்கோட்டை பேராங்குளத்தில் விழுந்து பெண் உயிரிழந்த நிலையில், சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட சின்னப்பா நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமா (40). இவர் மனநிலை சரியில்லாதவர் எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ரமா நேற்று இரவு முதல் காணவில்லை என அவரது கணவர் சண்முகம் தேடி வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்று காலை பேராங்குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கணேஷ் நகர் போலீசார் பெண்ணின் சடலம் குறித்து விசாரணை செய்த போது அது ரமா என்பது தெரியவந்தது. பின்னர் அவரது கணவர் சண்முகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சண்முகம் மனநலம் சரியில்லாத மனைவி ரமா உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரமாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.