கர்நாடகாவில் 619 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பான பெங்களூர் நகர திட்டத்தின் டெண்டர் வழங்கும் செயல்முறை குறித்த இரகசிய தகவல்களைப் பெறுவதற்காக, ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, மாநில உள்துறை செயலாளராக ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசின் நிர்பயா நிதியத்தின் கீழ் இந்த திட்டத்திற்கு நிதியளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நகரத்தின் பல்வேறு இடங்களில், பலவகையான 7,500 பாதுகாப்பு கேமராக்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட முன்மொழிவுக்கான வேண்டுகோளை (ஆர்.எஃப்.பி) தயாரிக்க ஒரு தன்னாட்சிமிக்க திட்ட மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தை நகர போலீசார் நியமித்தனர்.
இந்த திட்டத்திற்கான டெண்டர் நவம்பர் 11 அன்று பதிவேற்றப்பட்டது. அப்போது திட்டத்துடன் தொடர்பில்லாத ஒரு அதிகாரி, டெண்டர் பதிவேற்றப்படுவதற்கு முன்பு ஆலோசகர்களிடமிருந்து டெண்டர் தகவல்களைப் பெற முயற்சித்தது போலீசாருக்குத் தெரியவந்தது. முந்தைய ஆர்.எஃப்.பி ரத்து செய்யப்பட்ட விவரங்களையும் பெண் அதிகாரி கோரியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நவம்பர் 9 ம் தேதி ஆலோசனை நிறுவனம் பெங்களூரு காவல்துறையினரை தொடர்பு கொண்டு, தகவல்களை உள்துறை செயலாளர் என சொல்லிக்கொண்ட அந்த அதிகாரியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று கேட்டனர். இதுபற்றி உள்துறை செயலாளரிடம் விசாரித்தபிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.