திமுகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை எனவும் திமுக தலைமையிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை எனவும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளுஅம்மாளை இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. அழகிரி, சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ஜனவரி 3 ஆம் தேதி ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. திமுக தலைமையிடம் இருந்து இந்த அழைப்பும் வரவில்லை. ரஜினி சென்னை வந்தவுடன் கண்டிப்பாக அவரை சென்று சந்திப்பேன். ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுப்பேன். ஆதரவாளர்கள் சொன்னால் புதிய கட்சி தொடங்குவேன்.” எனத் தெரிவித்தார்.