நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய கல்யாண சுந்தரம் நேற்று அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அதிமுகவில் இணைய காரணம் என்ன?
முன்னதாக திராவிட கட்சிகளை எதிர்த்து, நாங்கள் தமிழ் தேசிய கருத்துகளை முன் வைத்தோம். தமிழ் தேசியம் உலகத் தமிழர்களின் நலனை உள்ளடக்கியே இருந்தது. அந்த வகையில் இன்று உலகத் தமிழகர்களை அங்கீகரிக்கிற அரசாக எடப்பாடி பழனிசாமியின் அரசை நாங்கள் பார்க்கிறோம். அதன் அடிப்படையிலேயே நாங்கள் எங்களை இதில் இணைத்திருக்கிறோம். ஒரு நல்ல தமிழர் நல்லாட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
பிரபாகரனின் கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சியுடன் உங்களை இணைத்துள்ளீர்கள். இது உங்களின் கொள்கைக்கு எதிரானாதாக இல்லையா?
அந்த நிலைப்பாடு மாறியிருக்கிறது. அப்படி ஒரு தீர்மானம் போடப்பட்டது உண்மை. அந்த தீர்மானம் காளிமுத்து சபாநாயகராக இருக்கும் போதுதான் கொண்டுவரப்பட்டது. ஆனால் இங்கு அதை விட முக்கியம் அதற்கு பின்னர் நடந்ததுதான்.
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மைத்ரேயன் ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதாவது விடுதலை புலிகள் சார்பாக, அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் அது. இதுவே 2009 ஆம் ஆண்டில் நடந்த மனமாற்றம். அதை கவனியுங்கள். அதிமுக அரசுக்கு தமிழ் ஈழ விடுதலையோடு நீடித்த தொடர்பு உள்ளது.
யாருடைய அழைப்பில் நீங்கள் அதிமுகவில் இணைந்தீர்கள்?
அது குறித்து நான் என்னுடைய நேர்காணல்களில் தெரிவித்து இருந்தேன். நான் தொடர் பயணங்களை செய்தேன். அந்த பயணங்களின் வாயிலாக தமிழ்தேசியம் உருவாகி அது அதன் லட்சியத்தை அடையக் கூடிய சாத்திய கூறுகள் இல்லை என்பது புரிந்தது.
இந்த சூழ்நிலையில் இங்கு இருக்கக் கூடிய அரசு எந்த கோரிக்கையை வைத்தாலும் அதை நிறைவேற்றும் அரசாக உள்ளது. ஆனால் திமுக வின் கீழ் ஆட்சி அமையும்மென்றால் அது தமிழ்தேசியத்திற்கு எதிராக அமையும். அந்த விபத்து நடந்து விட கூடாது. அதற்காகவே நாங்கள் அதிமுகவை வலிமைப்படுத்த இணைந்திருக்கிறோம். என்றார்.