ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள். தேர்தல் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். பாஜகவில் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்” என்று கூறினார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அவர் கூறும் போது, “நாட்டின் முதுகெழும்பாக உள்ள விவசாயிகளுக்கான வருவாய் இரட்டிப்பு அடையவும், விவசாயிகளின் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்கள் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டு உள்ளது. வேளாண்சட்டங்கள், சந்தைப்படுத்துதலில் விவசாயிகள் ஏமாற்றப்படுவதையும் நஷ்டப்படுவதையும் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இதை பாஜக மட்டும் கூற வில்லை, 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இதே சட்டத்தை பற்றி கூறினார்கள், ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.
இடைதரகர்களை ஒழிக்கவேண்டும், விவசாயிகள் விரும்பும் தொகையை அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடுசெய்யவேண்டும். விவசாயம் செய்யும் முன்பே அவர்கள் பொருளுக்கான விலையை உருவாக்க திட்டங்கள் இந்த சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. வேளான் சட்டங்கள் விவசாயிகளின் நலன் கருதியே கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இந்த சட்டம் குறித்து விளக்கமளித்தாலும் அதனை ஏற்க மறுக்கிறார்கள்” என்றார்.