மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பீகார் வெற்றிக்குப் பிறகு பா.ஜ.க டார்கெட் செய்திருப்பது மேற்கு வங்கம். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால், அங்கு ஏற்கெனவே மம்தா பானர்ஜி வலுவான நிலையில் இருப்பதால், அவரை எதிர்க்க பா.ஜ.க மத்திய தலைமை, `மிஷன் பெங்கால்’ திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக கட்சி பொதுச் செயலாளர்கள் கைலாஷ் விஜயவர்ஜியா தலைமையில் 11 பேர் கொண்ட குழு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே, திரிணாமுல் கட்சியில் தலைவர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சியில் இருந்து வெளியேறும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த மூன்று மற்றும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். அத்துடன், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்பி மற்றும் ஒரு முன்னாள் எம்.பியும் பாஜகவில் இணைந்துள்ளனர். மேலும் மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக கொல்கத்தா சென்றுள்ள நிலையில், அவர் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.