விவசாயிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என திமுக கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணி கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். கொரோனா தொற்று காரணமாக சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் போராட்டங்களுக்கு அனுமதியில்லை என சென்னை காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.