சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சுதாகரனை விடுதலை செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, சசிகலா மற்றும் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நான்காண்டு கால தண்டனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில், வழக்கில் 4-ஆவது குற்றவாளியான சுதாகரன், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், வழக்கு தொடரப்பட்டபோது, 92 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததாகவும், அதனை நான்காண்டு கால தண்டனையில் கழித்துவிட்டு முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யுமாறு குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 92 நாட்களுக்கு பதிலாக 89 நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதாகக் கூறி, சுதாகரனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டது. இன்னும் ஒரிரு நாட்களில் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை செலுத்திய பிறகு, சுதாகரன் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.