கேரள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணிக்கு கடும் போட்டியாக இருக்கும் காங்கிரஸ் கூட்டணி இரண்டாம் இடத்தை வைக்கிறது. பாஜக கூட்டணி குறிப்பிடத்தக்க அளவில் பெரிதாக முன்னிலை வகிக்கவில்லை.
கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையேதான் ஓரளவு கடும் போட்டி நிலவுகிறது. பாஜக ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பின்தங்கியுள்ளது.
பிற்பகல் 1.30 மணி வெற்றி / முன்னிலை நிலவரம்:
> 6 மாநகராட்சிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 3 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
> 86 நகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 35 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
> 14 மாவட்ட ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 10 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
> 152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரி கூட்டணி 109 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களிலும், பாஜக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
> 941 ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 512 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 369 இடங்களிலும், பாரதிய ஜனதா கூட்டணி 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
நகராட்சிகள் தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பரவலாக இடதுசாரிகளே முன்னணியில் உள்ளன. பாரதிய ஜனதாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கேரளாவில் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி ஆகிய 1,199 உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிவடைகிறது. தொடர்ந்து அந்த பதவிகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க டிசம்பர் 8, 10, 14. ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சராசரியாக 77 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, இன்று காலை மாநிலம் முழுக்க 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுக்க பரவலாக ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இரண்டாவதாக, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.