கர்நாடக மாநிலம் சித்தூரில் 4 மாத ஊதியம் கொடுக்காத செல்போன் உதிரிபாக நிறுவனத்தை ஊழியர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் மாவட்டம் நர்சபூர் அருகே ஐ-போன்களுக்கு உதிரிபாகம் தயாரித்து தரும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 15,000 லிருந்து 21,000 வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த பொறியாளர்கள், ஊழியர்கள் 7000 முதல் 9000 வரை சம்பளம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனைக்கண்டித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திய நிலையில் நிறுவனம் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆத்திரமடைந்த ஊழியர்கள், நிறுவனத்தையும் அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதில் நிறுவனத்தின் வரவேற்பரை முழுவதும் சேதமானது.
ஒரு கார் தீ வைக்கப்பட்ட நிலையில், இரண்டு கார்கள் சேதமானது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும் போது “ கிட்டத்தட்ட 125 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவனத்தில் எந்த யூனியனும், யூனியன் தலைவரும் கிடையாது. ஊழியர்களால் நிறுவனம் சூறையாடப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறோம்.” என்று கூறப்பட்டது.
தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த வருடம் 680 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.