புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
நாடாளுமன்றம் மற்றும் அதனையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்-இல் பல விதிமீறல்கள் இருப்பதாகவும், அதனை நிறுத்த வேண்டும் என்றும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது கடந்த 7ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது, விசாரணை முடியும் வரை புதிதாக கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டுமானங்களை இடிக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மரங்களை வெட்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இவை பின்பற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழா நடைமுறை செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறக்கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். புதிய நாடாளுமன்ற கட்டடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தொடர்பாக பிரதமர் உரையாற்றுவார் எனத் தெரிகிறது.
971கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் இந்தக் கட்டடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது