தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 9 விழுக்காடு அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர், புரெவி புயல்கள் காரணமாக கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக பெருமழை பெய்தது. இந்நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் 39. 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது இயல்பான அளவை விட 9 சதவீதம் அதிகமாகும்.
தலைநகர் சென்னையில் மட்டும் 102 .9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 47 சதவீதம் அதிகமாகும். இதனிடையே வடகிழக்கு பருவக்காற்றால் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை எட்டரை மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 7 சென்டி மீட்டரும், கோத்தகிரி மற்றும் குன்னூரில் தலா 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.