இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு இன்னும் சில வாரங்களில் ஒப்புதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் இருண்ட காலம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த மருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இவை தரவி பாரத் பயோடெக் நிறுவனம், சீரம் நிறுவனம் ஆகியவையும் மருந்து தயாரிப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதில், இந்தியாவில் அவசர தேவைக்காக தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்குமாறு ஃபைசர், பாரத் பயோடெக் மற்றும் சீரம் ஆகிய மூன்று நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளன.
இதனால், இந்தியாவில் இந்தத் தடுப்பு மருந்துகள் அடுத்து வரும் வாரங்களிலோ, அல்லது மாதங்களிலோ பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பயன்பாட்டுக்கு வந்தால் முதலில் யாருக்கு தடுப்பூசி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தடுப்பூசி பயன்பாடு, அதன் நிர்வாகம் ஆகியவற்றை முடிவு செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பு மருந்து நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழுவை அமைத்திருந்தது. இந்தக் குழு தற்போது யாருக்கு முதலில் வழங்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் முதலில் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களில் உள்ள சுகாதார பணியாளர்களின் தகவல்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக மத்திய, மாநில காவல்துறையினர், ஆயுதப் படையினர், பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள், நகராட்சி ஊழியர்கள் என 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டமாக 50 வயதை கடந்த 27 கோடி முதியவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகமும் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது