மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் ‘டெல்லி சாலோ’ போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாட்டின் குளிர்நகரான தலைநகர் டெல்லியில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களையும் வாபஸ் பெறச்சொல்லி கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநில விவசாயிகள். இவர்களின் ’டெல்லி சாலோ’ போராட்டத்திற்கு உறுதுணையாக பல மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டங்கள் வலுத்துக்கொண்டிருக்கின்றன. வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் இந்தியா முழுக்க வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரைத்தொடர்ந்து இந்தியாவிலும் அரசியல் மட்டுமல்லாது சினிமா,விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் உணவுப் படைவீரர்கள் விவசாயிகள்தான். அவர்களின் பிரச்னைகளையும் அச்சங்களையும் அரசு தீர்க்கவேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யவேண்டும். இந்த நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்யப்படவேண்டும்” என்று விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரியங்கா சோப்ரா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தாலும் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை பாராட்டியும் விமர்சித்தும் அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்துகொள்வார். அப்படித்தான், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதராவாக கருத்திட்டுள்ளார்.
Our farmers are India’s Food Soldiers. Their fears need to be allayed. Their hopes need to be met. As a thriving democracy, we must ensure that this crises is resolved sooner than later. https://t.co/PDOD0AIeFv
— PRIYANKA (@priyankachopra) December 6, 2020