குளித்தலை பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தையில், அருகில் உள்ள காலி இடங்களில் இருந்து மழைநீர் வந்து தேங்குவதால், உழவர் சந்தை வளாகத்துக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

உழவர் சந்தைக்குள் மழைநீர்

Also Read: கரூர்: கனமழையில் இடிந்து விழுந்த 3 வீடுகள்! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. குளித்தலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை இங்கு வந்து விற்பனை செய்கின்றனர். தவிர, வியாபாரிகளும் விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்கி, இங்கு வைத்து விற்பனை செய்துவருகின்றனர். இந்த உழவர் சந்தையில், குளித்தலை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். கொரோனா பிரச்னையால், கொஞ்சகாலம் செயல்படாமல் இருந்த இந்த உழவர் சந்தை, கடந்த இருபது நாள்களாக செயல்பட்டு வருகிறது. அதுமுதல் குறைந்த அளவே வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

உழவர் சந்தைக்குள் மழைநீர்

இதனால், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை. குளித்தலைப் பகுதியில் வாரச்சந்தை ஒன்றும் செயல்பட்டு வந்தது. கொரோனா பிரச்னையால், அந்த வாரச்சந்தை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குளித்தலை நகரவாசிகளுக்கு காய்கறிகள் வாங்க இருக்கும் ஒரே இடம், இந்த உழவர் சந்தைதான். இந்த நிலையில்தான், புரெவி புயல் காரணமாக பெய்துவரும் கனமழையால், உழவர் சந்தை வளாகத்துக்குள் மழைநீர் தேங்கி, வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்வதில் சிக்கல் ஏறட்டுள்ளது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான மது,

“குளித்தலை பகுதி மக்களுக்கு காய்கறிகள் வாங்க இருக்கும் ஒரே இடம் இந்த உழவர் சந்தைதான். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பல உழவர் சந்தைகள் செயல்படுவதில்லை. ஆனால், குளித்தலையில் உள்ள இந்த உழவர் சந்தை தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால், லேசாக மழை பெய்தாலே, அருகில் உள்ள காலி இடங்களில் உள்ள மழைநீர், உழவர் சந்தைக்குள் வந்துவிடுகிறது. அதற்கு காரணம், ஆக்ரமிப்புகள்தான். உழவர் சந்தைக்குள் வரும் மழைநீரை, நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், சாக்கடை நீர் கலந்து வரும் மழைநீர் தேங்கி, இங்குள்ள வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் சூழல் ஏற்படுது. மழைநீரால் இங்கு விற்கப்படும் காய்கறிகளும் சுகாதார சீர்கேடு அடைகிறது.

மது

அதேபோல், உழவர் சந்தை வளாகத்துக்குள் உள்ள கட்டடங்கள் கட்டப்பட்டு, 15 வருடங்களுக்கு மேல் ஆவுது. ஹாலோபிளாக்கால் கட்டபட்டுள்ள அந்த கட்டடங்கள், மழைநீரால் ஊறிபோய், சிதிலமடையும் நிலையில் உள்ளது. அதனால், நகராட்சி நிர்வாகம், காலி இடங்களில் இருந்து உழவர் சந்தைக்குள் வரும் மழைநீரை வரவிடாமல் தடுக்கும் அமைப்பை ஏற்படுத்தணும். அதற்கு, அங்குள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி, மழைநீர் வேறு இடங்களுக்கு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். உழவர் சந்தைக்குள் சூழும் மழைநீரை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கணும். உழவர் சந்தைக்குள் புது கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யணும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.