புரெவி புயலால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது
திண்டுக்கல் வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள புரெவி புயல் வலு குறைந்துள்ளது. சென்னையில் இரவில் சாரல் மழை பெய்த நிலையில், அதிகாலை முதல் பல இடங்களில் கனமழை கொட்டியது.. கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, அசோக் நகர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் மழை பொழிந்தது
புதுக்கோட்டை நகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மயிலாடுதுறையில் இரவில் கனமழை பெய்தது. குத்தாலம் அருகே கோமல் என்ற கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர் மழையால் தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து 8 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேலும் விளை நிலங்களும் மழை நீரில் மூழ்கியதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு செய்யூர் பகுதிகளில் ஒரு சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீராசாமி என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பசுமாடு ஒன்று உயிரிழந்தது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மழை நீருடன், கழிவுநீரும் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். வாகன ஓட்டிகள் பலரும் அதில் விழுந்ததால் ஆத்திரம் அடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.