ஓ.பி.எஸ் அவரது கருத்தைச் சொல்லியிருக்கிறார்!
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினி கட்சி குறித்த கேள்விக்கு, “ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அதன் பிறகு எனது கருத்தைச் சொல்கிறேன். கட்சி தொடங்குவதாக அறிவிப்பைத்தான் ரஜினி வெளியிட்டிருக்கிறார். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி என ஓ.பி.எஸ் அவரது கருத்தைச் சொல்லியிருக்கிறார்’’ என்று பதிலளித்தார்.
Also Read: ரஜினியின் புதிய கட்சி: `அரசியலில் எதுவும் நிகழலாம்; வாய்ப்பிருந்தால் கூட்டணி!’ – ஓ.பி.எஸ்
மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து இருந்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான விவாதங்கள் அதிகம் நடைபெற்றுவருகின்றன. பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன. அமெரிக்காவின் தடுப்பூசி ஒன்றும் சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் இந்தியாவில், கொரோனா தடுப்பூசி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அடுத்த ஆண்டு முதல் தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்குத் தடுப்பூசியைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.