புரெவி புயல் காரணமாக, தென்தமிழகம் மற்றும் தென்கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு இந்திய வானிலை துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் மீது மையம் கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணிக்கு மன்னார் வளைகுடாவுக்கு 40 கி.மீ கிழக்கிலும், பாம்பனுக்கு 120 கி.மீ கிழக்கு-தென்கிழக்கிலும், கன்னியாகுமரிக்கு 320 கி.மீ கிழக்கு – வடகிழக்கிலும் மையம் கொண்டிருந்தது. இது, மன்னார் வளைகுடாவை நோக்கி மேலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் இருந்து 90 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புயலானது பாம்பன் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே உள்ள தென் தமிழக கடற்கரையை இன்றிரவு மற்றும் நாளை அதிகாலைக்கிடையே கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 70-80 கி.மீ வேகத்தில் இருந்து, 90 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்றும், கடும் மழை பொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

image

தென் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களிலும், தெற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களிலும் இன்று பலத்த முதல் மிக பலத்த மழைபெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல் பாதிப்பு டிசம்பர் 4-ம் தேதி காலைவரை தொடரும். தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 3ம் தேதி) ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும்.

image

வட தமிழகம், புதுச்சேரி, மாஹே, காரைக்கால், வடக்கு கேரளா ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடலோரப் பகுதி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் டிசம்பர் 3,4-ம் தேதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தென் தமிழ்நாடு மற்றும் தெற்கு கேரளாவில் நாளையும் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 3 முதல் 5 வரை மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடைசியாகக் கிடைத்த மற்றொரு அப்டேட்டின்படி, இன்று மாலை 6 மணியிலிருந்து அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.