வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல், குமரிக்கடல் வழியே கடந்து செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள கன்னியாகுமரி மீனவர்கள் 1500 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை.

புயல் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 500க்கும் அதிகமான விசைப்படகுகள் கரைத்திரும்பியுள்ளன. அதேசமயம், தொடர்பு கொள்ள முடியாத வகையில் 200 நாட்டிக்கலுக்கு அப்பால் உள்ள சுமார் 100 படகுகள் இன்னும் கரைத் திரும்பவில்லை. அதில் 1500 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை.

image

கடந்த 2017-ஆம் ஆண்டு உருவான ஒக்கி புயலால் ஏராளமான உறவுகளை இழந்த கன்னியாகுமரி கடலோர மக்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர். கடலில் சுமார் 1500 மீனவர்கள் புயல் குறித்த எந்த எச்சரிக்கையும் இன்றி இருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விமான மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க அவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயகுமார், மீனவர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேரளா, கோவா, கர்நாடக, லட்சத்தீவு பகுதிகளில் கரை ஒதுங்க அனுமதி கோரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.