இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெற்றி இலக்காக 375 ரன்களை நிர்ணயித்துள்ளனர்.
இந்திய – ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணி பவுலிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச்சும், டேவிட் வார்னரும் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறினர். இதனிடையே டேவிட் வார்னர் 69 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேசமயம் ஆரோன் பின்ச் சிறப்பாக விளையாடி தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார்.
இதனையடுத்து 114 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டொய்னிஸ், டக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்தும் மேக்ஸ்வெல்லும் படுவேகமாக ரன்களை சேர்த்தனர். ஐபிஎல் தொடரில் சோபிக்காத மேக்ஸ்வெல் இன்றையப் போட்டியில் இந்திய பவுலர்களை மிரட்டினார். மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை விளாசினார்.
இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷானே 2 ரன்களில் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஸ்மித் 62 பந்துகளில் சதம் அடித்தார். இதனைடுத்து 105 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார் ஸ்மித். ஸ்மித் தன்னுடைய இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை குவித்தது. இந்திய பவுலர்களில் முகமது ஷமி மட்டுமே சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.