தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயல், தீவிரப் புயலாக மாறியது. இது, அதிதீவிரப் புயலாக மாறி இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பான லைவ் அப்டேட்ஸ்…

நவ.25,2020 | காலை 11.10 மணி: புதுச்சேரியில் நாளை முதல் நவ.28 ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

நவ.25,2020 | காலை 11.10 மணி: தமிழக அரசு, இதுவரை 3,948 குழந்தைகள் உட்பட 24,166 பேரை தாழ்வான பகுதிகள் / பாதுகாப்பற்ற கட்டிடங்களில் இருந்து 987 நிவாரண மையங்களுக்கு மாற்றியுள்ளது.

நவ.25,2020 | காலை 11.03 மணி: செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அறிவுத்தல்களை வழக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தின் ஓடுதளங்களை முறையாக கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நவ.25,2020 | காலை 10.50 மணி: செம்பரம்பாக்கத்தில் 34,500 கன அடி வரை நீர் திறக்க முடியும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

நவ.25,2020 | காலை 10.37 மணி: சென்னையில் அடையாற்றுக் கரையோர மக்கள், வெள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நவ.25,2020 | காலை 10.37 மணி: சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் இருந்தால் நீர் திறக்கப்பட்டால் முடிச்சூரில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நவ.25,2020 | காலை 10.31 மணி: நிவர் புயல் காரணமாக சென்னையில் பேனர் மற்றும் பெயர்பலகைகளை சம்பந்தப்பட்டவர்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்குள் அனைத்து பேனர் மற்றும் பெயர்பலகைகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

நவ.25,2020 | காலை 10.05 மணி: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்படுவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அடையாறு கரையோரங்கள் வசிப்பவர்களும், தாழ்வானப் பகுதிகளிலுள்ளவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாலும் அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 1000 கன அடி நீர் என்பது அஞ்சத்தக்க அளவு இல்லை என்றும், 2015 அளவுக்கு தேவையற்ற பீதி வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. > விரிவாக வாசிக்க > ‘செம்பரம்பாக்கம் திறந்தாலே வெள்ளம் என்ற பீதி வேண்டாம்’ – நிலவரம் இதுதான்! 

நவ.25,2020 | காலை 9.40 மணி: தற்போது 22 அடியை நெருங்குவதாலும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4027 கன அடியாக உள்ளதாலும் ஏரியிலிருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் 1000 கன அடி திறக்கப்படுகிறது. நீர்வரத்திற்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும். எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருமலை மற்றும அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக செம்பரம்பாக்கம் வெள்ளக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 வெள்ளத்தோடு ஒப்பிடும்போது, அந்த அளவுக்கு இல்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மக்கள் 2015 அளவுக்கு பீதியடையத் தேவையில்லை என்றும், அதேவேளையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

image

image

நவ.25,2020 | காலை 9.11 மணி: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று நள்ளிரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடலூரில் இருந்து 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நகரந்து வருகிறது. புதுச்சேரிக்கு 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் மிக கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

நவ.25,2020 | காலை 8.45 மணி: சென்னைக்கு 8 ராணுவக் குழுக்கள் வரவழைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நவ.25,2020 | காலை 8.40 மணி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

image

நவ.25,2020 | காலை 8.30 மணி: தீவிரப் புயலாக மாறிய நிவர், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு 11:30 மணிக்கு, கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 310 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில், 320 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில், 380 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தது. அடுத்த 2 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திடையில் நகரும் என்றும் அதன் பின்னர் வடமேற்கு திசையிலும் நகரும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த 8 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதீத கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை செய்தித் தளத்தின் செவ்வாய்க்கிழமை இரவு வரையிலான லைவ் அப்டேட்ஸுக்கு > https://bit.ly/3fmLsH9

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.