செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவானது 1500 கன அடியிலிருந்து 3000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் இன்று மதியம் 12 மணியளவில் முதல்கட்டமாக 1000 கன அடி நீரை வெளியேற்ற அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 22 அடியை நெருங்கிவருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 21.94 அடி நீர் இருப்பு உள்ளது. 22 அடியை நெருங்கிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்துவிடப்படுகிறது. முன்னதாக ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு சுமார் 4,000 கன அடியாக உள்ள நிலையில், நீர் திறப்பு 1,500 கன அடியாக இருந்தது.
இந்நிலையில் ஏரியில் நீர்வரத்து 4000 கன அடிக்கும் அதிகமாக உள்ளதால் தற்போது அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவானது 1500 கனடியிலிருந்து 3000 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.