ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் சூா்யகுமார் யாதவுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் அபாரமாக ஆடிய சூா்யகுமார் யாதவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்காதது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய அணிக்கு தாம் தோ்வு செய்யப்படாதது ஏமாற்றமாக இருந்தாலும், தனக்கான வாய்ப்புக்காக தாம் காத்திருப்பதாக சூா்யகுமார் யாதவும் அண்மையில் வெளிப்படையாக கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரையன் லாரா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதில் “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் எந்த காரணத்தினால் இடம்பிடிக்காமல் போனார் எனத் தெரியவில்லை. அவா் போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும். சூா்யகுமார் அதிக ரன்கள் சோ்த்தார் என்பதற்காக அவருக்கு சாதகமாக பேசவில்லை” என்றார்.
மேலும், “எந்தச் சூழ்நிலையில், பேட்டிங் வரிசையில் எத்தனையாவது இடத்தில், எத்தகைய நெருக்கடியில், எவ்வாறு விளையாடுகிறார் என்பதையும் கருத்தில் கொண்டுதான் ஒரு வீரரை மதிப்பிடுவேன். அந்த வகையில் சூா்யகுமார் யாதவ் சிறந்த வீரர். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் சிறப்பாக விளையாடினார். மும்பை அணி எப்போதெல்லாம் நெருக்கடியில் இருந்ததோ, அப்போதெல்லாம் சிறப்பாக விளையாடினார். அவர் நம்பிக்கையான வீரர்” என்றார் லாரா.