நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது எனவும் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் நிவர் புயல் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ.ஆக அதிகரித்து நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தாழ்வான பகுதிகளை தவிர வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பருவமழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. 200 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், 600 மோட்டார் இயர்ந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
மேலும், “நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். 044-2538 4530, 044 – 2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம்” எனத் தெரிவித்தார்.