குளித்தலை அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமணத்தை மீறிய உறவால் பிறந்த 8 மாத குழந்தை ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5பேர் கைது செய்யப்பட்டனர்.

 image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருப்பத்தூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். கோயம்புத்தூரில் மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 15வயது மதிக்கத்தக்க பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்ததாக தெரிகிறது. அந்த மாணவியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் அவருக்கு திருமண ஆசைகாட்டி திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாகவும், அதனால் அந்த மாணவி எட்டு மாத கர்ப்பமானார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி கர்ப்பமாக இருந்த அந்த மாணவியை பிரசவத்திற்காக முசிறி தனியார் மருத்துவமனையில் இளைஞரின் பெற்றோர், மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனுமதித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்தை மீறிய உறவு முறையில் பிறந்த குழந்தை என்பதால், மருத்துவமனை மூலமாக வேறு ஒரு பெண்ணிடம் 5 ஆயிரத்திற்கு விலை பேசி விற்றதாக மாணவியின் தாயார் கூறினார். இந்நிலையில்; மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 image

இந்த சம்பவங்கள் குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிந்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியம் தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில் குளித்தலை மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் புகாரை பெற்று புகாரின் பேரில் இளைஞர் ரஞ்சித், அப்பா நல்லதம்பி, அம்மா சந்திரா, மாமன் முத்துச்சாமி, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், குழந்தையை ரஞ்சித்தின் தம்பி ரமேஷ் சிலருடன் சேர்ந்து குளித்தலை கடம்பர் கோவில் கடம்பந்துறை ஆற்றங் கரையில் யாருக்கும் தெரியாமல் மணல் பகுதியில் புதைத்து உள்ளதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரமேஷை அழைத்துச் சென்ற குளித்தலை டிஎஸ்பி சசிதர், தாசில்தார் முரளிதரன், போலீசார், மற்றும் வருவாய் துறையினருடன் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை டாக்டர் மணிவாசகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் முன்னிலையில் புதைத்து நான்கு நாட்களே ஆன சிசுவை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரஞ்சித்தின் அப்பா நல்லதம்பி, அம்மா சந்திரா, தம்பி ரமேஷ் ஆகிய மூவரையும் கைது செய்த மகளிர் போலீசார் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நல்லதம்பி மற்றும் ரமேஷை குளித்தலை கிளைச் சிறையிலும், சந்திராவை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் இன்று ரஞ்சித் மற்றும் அவருடைய மாமா முத்துசாமி ஆகிய இருவரையும உதவி ஆய்வாளர் பாரதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.