சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஹிட்மேன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா. இதுவரை இந்தியாவுக்காக 224 ஒருநாள், 108 டி20 மற்றும் 32 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் விளையாடியுள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் இரண்டாம் இடத்தில் உள்ள டாப் கிளாஸ் பேட்ஸ்மேன். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள தொடரில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ரோகித் விளையாட உள்ளார்.
அதற்கான காரணம் என்ன?
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரின் போது இடது காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அது பலத்த சர்ச்சையாக வெடித்தது. ரசிகர்கள் பிசிசிஐ தேர்வு குழுவை கேள்விகளால் விமர்சித்திருந்தனர். அதே நேரத்தில் மும்பை அணிக்காக கடைசி இரு ஆட்டங்களில் ஆடிய ரோகித் சர்மா தனது உடல் திறனை நிரூபித்தார்.
அதையடுத்து ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் ரோகித் சேர்க்கப்பட்டார். அதையும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். “ஏன் ஹிட்மேனை ஷார்ட்டார் பார்மெட் (50 ஓவர், 20 ஓவர்) கிரிக்கெட்டில் சேர்க்கவில்லை?” என ரோகித்துக்காக குரல்கள் எழுந்தன. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை தொடங்கியுள்ளார் ரோகித்.
“ரோகித்தும், இஷாந்தும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்களது உடற்திறனை நிரூபிக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்கள் இருவரும் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குள் ஆஸ்திரேலிய ஃபிளைட் பிடித்தாக வேண்டும். அப்படி இல்லை என்றால் டெஸ்ட் தொடரில் விளையாடுவது கொஞ்சம் சவாலாக அமையலாம்.
நவம்பர் 26க்குள் இருவரும் ஆஸ்திரேலியா வந்தால் தான் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த முடியும். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதோடு டிசம்பர் 17 அன்று ஆரம்பமாக உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும். அப்படி செய்யாமல் போனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் விளையாடுவது கடினம் தான்” என ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இப்படி ரோகித்தை ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு காரணங்களை சொல்லி அணியிலிருந்து கழட்டி விடும் நோக்கிலேயே அவருக்கு எதிரான போக்கு அதிகரித்து வருகிறது.
காரணம் என்ன?
ரோகித் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 119 ரன்களை விளாசியிருந்தார். தொடர்ந்து நியூசிலாந்து தொடரில் காயம் காரணமாக விலகினார். இந்நிலையில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாட அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
கோலிக்கும் – ரோகித்துக்கும் இடையே நிலவும் ஈகோ தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. வழக்கமாக மும்பை லாபியை சேர்ந்தவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ரோகித் மும்பையின் மைந்தர். ஐபிஎல் தொடரிலும் அணியை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டனாக ரோகித் இருப்பதால் அவரை இந்திய அணியின் ஷார்ட்டார் பார்மெட் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சு எழுவது உண்டு. ரசிகர்கள், விமர்சகர்கள், அனுபவ வீரர்களும் இது குறித்து பேசியுள்ளனர்.
மறுபக்கம் கோலி ஐசிசி கோப்பையை தனது தலைமையில் வெல்ல முடியாமல் தவிக்கிறார். அதனால் ரோகித் அணியிலிருந்து ஓரம் கட்டப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக கே.எல்.ராகுலின் அதிரடி தொடக்கம் ரோகித்தின் கெரியரை ஆட்டம் காண செய்துள்ளது. அதிலிருந்து ரோகித் மீள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது.