அனுமதியின்றி பரப்புரை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதியை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக பரப்புரையில் ஈடுபட்டார். ஆனால் அனுமதியின்றி பரப்புரையில் ஈடுபட்டதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களும் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உதயநிதி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் திமுக தொண்டர்கள் அவரை கைது செய்ய விடாமல் போலீசாரை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. ஆனாலும் போலீசார் விடாமல் உதயநிதியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இரவு 10 மணி ஆகியும் உதயநிதியை போலீசார் விடுதலை செய்யவில்லை. அவரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் திமுகவினர் ஒன்றுதிரண்டு உதயநிதியை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏன் இதுவரை உதயநிதியை விடுவிக்கவில்லை என்பது குறித்து போலீசாரிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.