நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2014-ம் ஆண்டு ‘ஜனசேனை’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ‘ஜனசேனை’ பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை.
இந்நிலையில் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நகராட்சி தேர்தலுக்காக பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்பின் பின்னர் இம்முடிவை அறிவித்துள்ளார் பவன் கல்யாண்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, 150 வார்டுகள் கொண்ட கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியில் 60 வார்டுகளில் ஜனசேனா போட்டியிடும் என்று பவன் கல்யாண் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பாஜக வாக்குகள் பிளவுபடாமல் பார்த்துக் கொள்ளுமாறு தனது கட்சி தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
பீகார் மற்றும் துபாக் தேர்தல் முடிவுகள் நாட்டின் எல்லா மூலைகளிலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விரும்புகின்றன என்பதைக் காட்டுகிறது. பிரதமரின் தலைமையில் ஹைதராபாத் ஒரு வளர்ந்த உலக நகரமாக உருவெடுக்கும் என்று நம்புகிறேன். “ஒரு பாஜக வேட்பாளர் ஹைதராபாத் மேயராக வருவார் என்று நான் முழு மனதுடன் நம்புகிறேன் ” என்று கல்யாண் கூறியுள்ளார்.
‘ஜனசேனை’ அடுத்த தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்றும் கொரோனா மற்றும் மழை வெள்ளம் காரணமாக இந்த முறை கூட்டணி வைக்கவில்லை என்றும் பவன் கல்யாண் தனது தொண்டர்களிடம் விளக்கினார்.