15 வருடங்களாக முதலமைச்சராக பதவி வகித்த நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்றார்
பீகாரில் தேர்தலில் பாஜக கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றி, பீகாரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே பா.ஜ.க தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், மீண்டும் பீகார் முதல்வராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இன்று காலை 11 மணியளவில் நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இன்று மாலை ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்க நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். இத்துடன் பீகார் முதல்வராக 7 வது முறையாக பதவியேற்றுள்ளார் நிதிஷ் குமார்.
நடந்துமுடிந்த சட்டப் பேரவை தேர்தலில், 243 தொகுதிகளில் பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. நிதிஷ் குமார் பதவியேற்புக்கு பின், துணை முதலமைச்சர்களாக தார்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணுதேவி ஆகியோர் பதவியேற்றுள்ளனர். இவ்விழாவில் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முறைகேடு செய்து தேர்தலில் வெற்றிபெற்றதாகக் கூறி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன.