தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கிழக்கு திசை காற்று உள்ளே நுழைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கிறது. மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணா நகர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, ராயப்பேட்டை, மெரினா, ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், தாம்பரம், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், செங்குன்றம் உள்பட புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலை 4 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம், திருகழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. மேலும் தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, நாகூர், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவாலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனிடையே சென்னையில் இன்றும், நாளையும் மழை தொடரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.