நெய்வேலியைச் சேர்ந்த செல்வமுருகன் போலீஸ் காவலில் உயிரிழக்கவில்லை என காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
விசாரணையின்போது உயிரிழந்த செல்வமுருகனின் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அவர் கடந்த 4ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இன்றுவரை உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கு விசாரணை கடந்த 6ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று சென்னையை சேர்ந்த டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் சிபிசிஐடி குழு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருதாக தகவல்கள் வெளிவந்தன.
நெய்வேலி விசாரணைக் கைதி செல்வமுருகன் மரணம் – எதிர்ப்பால் சிபிசிஐடி அதிகாரி மாற்றம்
இந்நிலையில், நெய்வேலியைச் சேர்ந்த செல்வமுருகன் போலீஸ் காவலில் உயிரிழக்கவில்லை என காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அரசியல் நோக்கத்துக்காக கட்டுக்கதைகள் புனையப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடியை எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரர் பிரேமாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், தமிழக அரசு, சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.