சூர்யா நடிப்பில், இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம்தான் இன்று டாக் ஆப் தி கோலிவுட். ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ‘பரதேசி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளாராக பணியாற்றிய பூர்ணிமா ராமசாமிதான் காஸ்ட்யூம் டிசைனர். அதிகாலைப் பொழுதில் அலைபேசியில் அவருடன் உரையாடலைத் தொடங்கினேன்.
ஆடை வடிவமைப்பில் ரியல் மாறாவின் எந்தெந்த விஷயங்களை நாங்கள் ரீல் மாறாவில் எதிர்பார்க்கலாம்?
“ஜி.ஆர்.கோபிநாத் கண்ட கனவானது அவரது வாழ்கையைவிட மிகப்பெரியது. அவருக்கு அவரது ஆடை அயர்ன் பண்ணப்பட்டிருக்கிறதா, தொளதொளவென்று இருக்கிறதா என்பதை பற்றிப் யோசிப்பதற்கெல்லாம் நேரம் கிடையாது. அவரது வாழ்கையின் ஒரே நோக்கம் அவரது கனவு மட்டும்தான். அதுதான் எங்களுக்கான மையப்புள்ளி.
அந்த மையப்புள்ளியை வைத்துதான் சூர்யாவுக்கான ஆடைகளைத் தேர்ந்தெடுத்தோம். குறிப்பாக, கருப்பு நிறத்திலேயே விதவிதமான கருப்பு நிற ஆடைகளை தேர்ந்தெடுத்து சூர்யாவுக்கு கொடுத்தோம். அதுதான் கதாபாத்திரத்தின் அடர்த்தியை கொடுக்கும் என்பதால் கருப்பைத் தேர்ந்தெடுத்தோம். ராணுவ மற்றும் ஏர் ஃபோர்ஸ் கதாபாத்திரங்களை பொருத்தவரையில், அதிகாரிகள் என்ன டிசைன் ஆடைகளை உபயோகித்திருந்தார்களோ, அதே ஆடைகளையே உபயோகித்திருக்கிறோம்.”
இயக்குநர் சுதா கொங்கரா, உங்களிடம் இந்தக் கதையை சொன்னபோது உங்களின் எண்ணம் என்னவாக இருந்தது?
“சுதாவும் நானும் இயக்குநர் பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்திலிருந்து ஒன்றாக பயணித்து வருகிறோம். ஆடை வடிவமைப்பாளாராக எனக்கு அது முதல் படம். அதனால் என்னுடைய முழு உரையாடலும் சுதாவுடனேயே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவருடைய வொர்க்கிங் ஸ்டைலை, எனக்கான வொர்க்கிங் ஸ்டைலாக நான் மாற்றிக்கொண்டேன்.
படம் உருவாக்கத்தில் சினிமா கலைஞர்கள் செய்யும் ரிசர்ச், படப்பிடிப்புக்கு அவர்கள் செய்யும் மெனக்கடல் என எல்லாமே முறையான திட்டமிடலோடு நடக்கும். எனக்கு அது மிகவும் பிடிக்கும். காரணம், அதன் பின்னர் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கண்முன்னே இருக்கும்.
‘சூரரைபோற்று’ படத்தை பொறுத்தவரை ஒரு படத்தில் ஒரு விஷயம் உள்ளே நுழைகிறது என்றால், அதுகுறித்த ஒப்பினியன் கேமாராமேன், ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர் என எல்லோரிடமும் கேட்கப்படும். அதனால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் ஒரு கலெக்டிவ் டெஸிஷனாகத்தான் இருக்கும்.
சுதா முதலில் டெக்னிஷினியனுக்கு ஃபுல்பவுண்ட் ஸ்கிரிப்டை கையில் தந்துவிடுவார். ஸ்கிரிப்டைப் படித்து முடித்தவுடன் எனக்கு இது நிச்சயம் ஒரு என்டர்டெய்னருக்கான படமாக இருக்கும் எனத் தோன்றியது. அதனால் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினேன்.”
பாலாவுக்கும், சுதாவுக்கும் இடையே ஏதாவது சிமிலாரிட்டி இருக்கிறதா?
“ஏன் இல்ல… நிச்சயம் நிறைய சிமிலாரிட்டி இருக்கிறது. முதலில், இருவருக்கும் எல்லா டிப்பார்ன்ட்மென்ட் பற்றின விஷயமும் அத்துபிடியாகத் தெரியும். அதனால் கதை எழுதும்போதே இயக்குனர் என்கிற பெயரில் ஒரு முழுமையான விஷனோடு கதையை எழுதிவிடுவார்கள். எனவே, அவர்களிடம் எதையும் சொல்லி சமாளிக்க முடியாது.
இரண்டாவது… கிளாரிட்டி. அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதைவிட, என்ன வேண்டாம் என்பது தெளிவாகத் தெரியும். மூன்றாவது, அவர்கள் இருவருமே என்னிடம் சொல்லும் வாக்கியம்: ‘கதைக்கு உண்மையா இருக்கணும்’. நாயகர்களுக்கு அழகாக இருக்கிறது என்று எதையும் செய்யக்கூடாது என்பார்கள். அதுதான் எனக்கு இன்று வரை தாரகமந்திரமாக இருக்கிறது.
தியேட்டரை விட்டு யாரவது என்னிடம் வந்து நாயகனுக்கு அந்த டிரெஸ் நன்றாக இருந்தது என்று சொன்னால், அதை என்னுடைய தோல்வியாகவே கருதுவேன். எனது பணியானது கதைக்கு உண்மையாக இருப்பது மட்டுமே.”
‘சூரரைப்போற்று’ படத்தில் வெவ்வேறு வேரியேஷனில் சூர்யா வருகிறார். எவ்வளவு ரிசர்ச் போச்சு?
“சூர்யோவோட டீன் லுக் நாங்கள் முன்பே ப்ளான் பண்ணினதுதான். அதனால, அதுக்கு ஏற்றதுபோலவே ராணுவ உடைகளை தைத்து ட்ரெயல் பார்ப்பதற்காக சென்றிருந்தோம். அங்கு வந்த சூர்யாவை பார்த்த நாங்கள் ஷாக் ஆகிவிட்டோம். நாங்களே அந்த உடைகளை ரொம்ப டைட்டாதான் தைச்சுருந்தோம். ஆனா, அதுவே அவருக்கு லூசாக இருந்தது. அந்த அளவுக்கு சூர்யா மாறாவாக மாறியிருந்தார். 30 நாட்களுக்கு குறைவான நாட்களில் அவர் இந்த மாற்றத்தைச் செய்திருந்தார்.
இதற்காக கடுமையான டயட்டை எடுத்துக்கொண்ட சூர்யா, அந்த நேரத்தில் ஏர் ஃபோர்ஸ் சம்பந்தமான காட்சிகளிலும் நடித்தார். ஏர் ஃபோர்ஸ் சம்பந்தமான காட்சிகள் அனைத்துமே பல சவால்களுக்கு இடையே எடுக்கப்பட்டது.
குறிப்பாக, கனவுக்காக சூர்யா முயற்சி பண்ணும் காட்சிகளுக்கு, பிரேத்யமாக துணியை தைத்து அதை பலமுறை வாஷ் பண்ணி அதை சாயம் போகவைத்தை, எவ்வளவு லைவ்வாக கொடுக்கமுடியுமோ அப்படி கொடுத்தோம். அதேபோல சன்கிளாஸ். ஏர் ஃபோர்ஸ் அதிகாரிகளுக்கு சன்கிளாஸ் எனபது வாட்ச் மாதிரி. அவர்களது வாழ்வில் அதற்கு மிக முக்கிய இடம் இருக்கும். அதையும் சூர்யாவோட கேரக்டருக்கு பொருத்தினோம். இதற்கான ரிசர்ச் கிட்டத்தட்ட ஆறு மாசத்திற்கும் மேல் நடந்தது.”
‘சூரரைப்போற்று’ உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை கொடுத்துருக்கு?
“என்னுடைய முதல் பயோபிக் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தில் நிறைய அனுபவம் மிக்க நடிகர்கள் இருந்தார்கள். நிறைய ட்ராவல் இருந்தது. நேரமே இல்லாம ஓடிக்கிட்டு இருந்தேன். இப்போ ரொம்ப நிறைவா இருக்கு.”
– கல்யாணி பாண்டியன்