தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரை தொடங்கியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரையை தொடங்கி திருச்செந்தூர் வரை செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கடவுள் முருகனின் துணைகொண்டு வேல் யாத்திரையை தொடங்குவதாக கூறினார். கையில் வேலுடன் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருத்தணிக்கு அவர் புறப்பட்டார். அவருடன் பாஜகவை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் திருத்தணிக்கு புறப்பட்டனர். இதுஒருபுறம் இருக்க திருத்தணியின் அனைத்து எல்லைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.