ஹைதராபாத்தில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு குதிரைகளில் சென்று உதவி வருகின்றனர் தன்னார்வலர்கள்.
தெலுங்கானாவில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி அன்று, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தலைநகர் ஹைதராபாத் உள்பட பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தவிக்கிறார்கள்.
டோலி சவுக்கியில் உள்ள நதீம் காலனி, மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். ஹைதராபாத் குதிரை சவாரி பள்ளியின் தலைவரும் தலைமை பயிற்சியாளருமான மொஹமட் அப்துல் வஹாப், சேதத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தனது குதிரைகளை பயன்படுத்த முடிவு செய்தார்.
உடனே, பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்களின் குழுவைக் கூட்டி, அடிப்படை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கினார். இவற்றைக் கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நான்கு குதிரைகள் வெள்ளத்தில் குதித்தன. .
இதுகுறித்து அப்துல் வஹாப் ‘தி நியூஸ் மினிட்’க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘’குதிரைகள் சிரமமின்றி தண்ணீரில் சுற்றி வரக்கூடியவை. நாங்கள் எங்கள் குதிரைகளை அகாடமியில் ஒரு பெரிய குளத்தில் பயிற்றுவிக்கிறோம். வட இந்தியாவில் குதிரைகள் ஆறுகளைக் கடக்க கூட பயன்படுத்தப்படுகின்றன. இந்த சோதனையான காலக்கட்டத்தில் எனது குதிரைகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு காலத்தில் குதிரைகள் போர்களில் பயன்படுத்தப்பட்டன, அவை வலுவான சுறுசுறுப்பானவை. குர்ஆன் கூட குதிரைகளின் வீரம் பற்றி குறிப்பிடுகிறது.
நாங்கள் சாப்பாடு, மெழுகுவர்த்திகள், கொசுவர்த்திகள், பால், பிஸ்கட், தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். குறுகலான பகுதிகளுக்குள் செல்ல குதிரைகள் உதவிகரமாக இருந்தன.
படகுகளுக்கு கடுமையான பற்றாக்குறை இருந்தது. படகுகளை மாநில அரசு மற்ற மாநிலங்களை அணுக வேண்டியிருந்தது. நெருக்கடி சூழ்நிலையில் நாங்கள் ஏதேனும் உதவியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
அகாடமியில் சுமார் 40 குதிரைகள் உள்ளன. அவற்றில் 10 குதிரைகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு குதிரைக்கும் சுமார் 5-8 லட்சம் ரூபாய் செலவாகும். இது ராஜஸ்தானின் மார்வார் பகுதியைச் சேர்ந்த இந்திய இனமான மார்வாரி இனத்தைச் சேர்ந்தது’’ என்று அப்துல் கூறினார்.