பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாகவும், சர்ச்சை குறித்த கருத்துக்களை பேசியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவைச் சேர்ந்த அஷ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று நேற்று ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டது. இது தொடர்பாக பேட்டி அளித்த பாஜகவின் நிர்வாகி குஷ்பு, இந்த விவகாரத்தில் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனிடைய, மனு ஸ்மிருதியை தடை செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.