எந்த எதிர்பார்ப்புமின்றி சேவை செய்யும் மருத்துவர்களைப் பார்ப்பது இந்த காலத்தில் மிகவும் அரிது. ஆனால் 87 வயது ஆகியும் கடந்த 60 வருடங்களாக ஏழை மக்களுக்கு சேவைசெய்து வருகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர்.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூரைச் சேர்ந்தவர் ஹோமியோபதி மருத்துவர் ராமசந்திரா தனேகர். இவர் இந்த கொரோனா காலத்திலும் தனது சேவையை நிறுத்தாமல், 10 கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள கிராமத்திற்கு வெறும் காலில் சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்து வருகிறார். ’’கடந்த 60 ஆண்டுகளாக பெரும்பாலும் தினமும் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சையளித்து வருகிறேன். இப்போதுள்ள மருத்துவர்கள் கொரோனா பயத்தால் சிகிச்சை கொடுக்க பயப்படுகின்றனர். பணத்திற்கு பின்னால்தான் ஓடுகின்றனர். ஆனால் எனக்கு அந்த பயம் இல்லை’’ என ஏஎன்ஐ-க்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் தனேகர்.
1959ஆம் ஆண்டு நாக்பூர் கல்லூரியில் ஹோமியோபதி டிப்ளோமா படித்த இவர், அங்குள்ள கிராம மக்களால் டாக்டர் என அன்போடு அழைக்கப்படுகிறார். வெறும்காலில், கண்ணாடி அணியாமல், செல்போன் இல்லாமல் ஒரு மருத்துவரைப் பார்ப்பது ஆச்சர்யமாக இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். தினமும் காலை 6.30 மணிக்கே இரண்டு பைகளில் மருந்தை எடுத்து சைக்கிளில் வைத்துக்கொண்டு கிளம்பி விடுவாராம். சைக்கிளில் செல்வது உடலை ஆரோக்யமாக வைத்திருப்பதாகக் கூறுகிறார் இவர். தான் எப்போதும் மருத்துவம் பார்ப்பதற்கு கட்டணம் கேட்பதில்லை என்றும், தாமாக மனமுவந்து கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.