மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 2வது சூப்பர் ஓவர் வரை சென்று பஞ்சாப் அணி வென்றது.

ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 9 (8) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடக்க வீரராக பேட்டிங் செய்த குயிண்டான் டி காக் நிலைத்து ஆடினார்.

image

ஆனால் ஒன் டவுனாக வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் 7 (7) ரன்களில் அவுட் ஆக, மும்பைக்கு நெருக்கடி வந்தது. பின்னர் வந்த க்ருனால் பாண்ட்யா மற்றும் டி காக் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 30 பந்துகளை சந்தித்த க்ருனால் பாண்ட்யா 34 ரன்களை எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு நடையைக்கட்ட, அரை சதம் கடந்த டி காக் 53 (43) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

image

கடைசி நேரத்தில் கைகோர்த்த பொலார்ட் மற்றும் குல்டர்-நைல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இறுதிவரை ஆட்டமிழக்காத பொலார்ட் 34 (12) ரன்களும், குல்டர்-நைல் 24 (12) ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. மும்பை பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் டிக் காக் அரை சதம் அடித்தது பலம். ஆனால் அவரைத் தவிர யாரும் அடிக்காதது பலவீனம். மிடில் ஆர்டரில் க்ருனால் பாண்ட்யாவும், லோயர் மிடில் ஆர்டரில் பொலார்ட்டும் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தியது மும்பை ஸ்கோரை 170ஐ கடக்க வைத்தது.

image

பஞ்சாப் பவுலிங்கில் ரவி பிஷ்னாய் தவிர எந்த பவுலரும் ரன்களை கட்டுப்படுத்தவில்லை. 2 ஓவர்களை வீசிய அவர் 12 ரன்கள் மட்டுமே கொடுத்ததுடன் ஒரு விக்கெட்டையும் சாய்த்திருந்தார். முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தங்கள் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தது மும்பைக்கு நெருக்கடியை கொடுத்தது.

177 ரன்கள் என்ற சவாலான இலக்கை எதிர்த்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இரண்டு கேட்ச் மிஸ்ஸிங் வாய்ப்பு கிடைத்தும் 11 (10) ரன்களில் மயங்க் அவுட் ஆகி சென்றார். அதன்பின்னர் வந்த கெயில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 24 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 2 சிக்ஸர்கள், பவுண்டரிகள் என அதிரடி காட்ட, 12 பந்துகளில் 24 ரன்களை விளாசிவிட்டுச் சென்றார். அவரைத்தொடர்ந்து கிளன் மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆக, பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

image

இதற்கிடையே கே.எல்.ராகுல் அரை சதம் கடந்து ஒற்றை மனிதனாக வெற்றிக்கு போராடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹூடா, சரியான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். 17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்திருந்தது. 18 பந்துகளில் 27 குவிக்க வேண்டும் என்ற நிலையில், பும்ராவிடம் பந்தைக்கொடுத்தார் ரோகித். அவர் கணித்தது போலவே 77 (51) ரன்களுடன் களத்தில் இருந்த கே.எல்.ராகுலை சரியான யார்க்கர் பந்தில் போல்ட் ஆக்கினார் பும்ரா. அப்போது பஞ்சாப் சரிவு உறுதியானது.

image

ஆனாலும் ஹூடா மற்றும் ஜோர்தான் ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணிக்கு நம்பிக்கையை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து குல்டர்-நைல் வீசிய 19வது ஓவரில் 13 ரன்களை விளாச, கடைசி ஒரு ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அந்த ஓவரில் ராகுல் சாஹர் ஹூடாவின் கேட்ச்சை மிஸ் செய்தது திருப்பமாக இருந்தது. ட்ரெண்ட் போல்ட் வீசிய அடுத்த ஓவரில் மீண்டும் ஒரு கேட்ச். இந்த முறை நாதன் குல்டர்-நைல் கேட்ச்சை தவறவிட்டிருந்தார். அடுத்த பந்தில் இன்சைட் எட்ஜில் பவுண்டரில் போக 4 பந்துகளுக்கு 4 ரன்கள் என்ற நிலை வந்தது. ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது. கடைசி பந்தில் 2 ரன்கள் என்ற நிலை வந்தபோது, போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லுமோ எனத்தோன்றியது. ஜோர்தன் அடித்துவிட்டு 2வது ரன்னை ஓட, ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி சூப்பர் ஓவர் சென்றது.

image

சூப்பர் ஓவரில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மற்றும் பூரன் களமிறங்கினர். மும்பை சார்பில் யார்க்கர் மன்னர் பும்ரா பந்துவீசினார். முதல் பந்தில் சிங்கிள் போக, 2வது பந்தில் பூரன் அவுட். அடுத்ததாக கிரிஸ் கெயில் அல்லது மயங்க் அகர்வால் வருவார் என எதிர்பார்த்தபோது ஹூடா களமிறங்கினார். அவரால் பும்ராவின் பந்தை எதிர்கொள்ள முடியவில்லை. அவர் மட்டுமின்றி ராகுலாலும் பும்ராவின் பந்தில் பவுண்டரி அடிக்க முடிவில்லை. 5 பந்துகளுக்கு 5 ரன்கள் போக, கடைசி பந்தில் ராகுல் அவுட் ஆகிச் சென்றார்.

சூப்பர் ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் முகமது ஷமி பந்துவீசினார். முதல் 3 பந்துகளுக்கு 3 சிங்கிள் போக, 4 பந்து டாட் ஆனது. இதனால் 2 பந்துகளுக்கு 3 ரன்கள் என்ற நிலை வந்தது. அடுத்த பந்தும் சிங்கிள் மிஸ் ஆக, எல்.பி.டபிள்யு-க்கு ரிவ்யூ சென்றார் கே.எல்.ராகுல். ஆனால் பந்து பேட்டில் பட்டிருந்ததால் விக்கெட் கொடுக்கப்படவில்லை. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, சூப்பரான ஒரு ரன் அவுட்டை செய்தார் ராகுல். இதனால் மேலும் ஒரு சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது. சிறப்பான ஒரு ஓவரை ஷமி வீசியிருந்தார்.

image

2வது சூப்பர் ஓவரில் மும்பை சார்பில் சிக்ஸர் மன்னன்களான பொலார்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஜோர்தன் பந்துவீசினார். 3 பந்தில் பொலார்ட் பவுண்டரியை விளாச, 4 பந்தில் ஹர்திக் ரன் அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே பொலார்ட் டிப் கேட்ச் ஆனார். அம்பயரும் அவுட் கொடுக்க, பொலர்ட் ரிவ்யூ சென்றார். அதில் அவுட் இல்லை என்பது உறுதியானது. கடைசி பந்தில் பொலார்ட் சிக்ஸ்க்கு பந்தை தூக்க, யாரும் எதிர்பாராத வகையில் அதை சிக்ஸ் லைனில் பிடித்து தடுத்தார் மயங்க் அகர்வால். இதனால் 6 பந்துகளுக்கு 11 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.

மும்பை அணி சார்பில் ட்ரெண்ட் போல்ட் ஓவரை போட்டார். பஞ்சாப் அணி சார்பில் கிறிஸ் கெயில் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். முதல் பந்திலேயே கெயில் சிக்ஸரை பறக்கவிட்டு மும்பைக்கு பயம் காட்டினார். அடுத்த பந்தில் சிங்கிள் போக, மயங்க் அகர்வால் ஸ்டிரைக் ஆடினார். அசால்ட்டாக மயங்க் ஒரு பவுண்டரியை அடிக்க 3 பந்தில் ஒரு ரன் என்ற நிலை வந்தது. அந்த பந்திலும் பவுண்டரி பறக்க அசத்தலான வெற்றியை பஞ்சாப் பெற்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.