கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில்குமார், இவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று வீட்டில் இருந்த போது கணவன் மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது, பின்னர் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி அரளி விதையை பறித்து வந்து அரைத்து அதை தண்ணீரில் கலந்து தானும் குடித்துவிட்டு தனது குழந்தைகளான சுபிக்ஷா (8), கிஷாந்த் (6) மற்றும் 3 வயதுடைய பெண் குழந்தைக்கும் கொடுத்துள்ளார்.
பின்னர் விஷம் அருந்திய முத்துலட்சுமி தண்ணீர் பிடிக்க வந்தபோது மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் முத்துலட்சுமியிடம் விசாரித்தபோது அரளி விதையை அரைத்து குடித்து விட்டேன் எனக் கூறியுள்ளார், உடனே அருகில் இருந்த உறவினர்கள் முத்துலட்சுமியை முசிறி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி இறந்துவிட்டார், இரு மகள்களும் ஒரு மகனும் குளித்தலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த லாலாபேட்டை காவல்நிலைய போலீசார் முத்துலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முத்துலட்சுமி இறப்பு குறித்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.