இந்தியாவில் சைக்கிள் விற்பனை கடந்த 5 மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளதாக அவற்றின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பொது முடக்க காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரமே முடங்கி பொருட்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ள நிலையில் சைக்கிள் விற்பனை மட்டும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது,
கடந்த மே முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்களில் மட்டும் 41 லட்சத்து 80 ஆயிரத்து 945 சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகம் என்றும் அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சைக்கிள் விற்பனை இது போன்று முன் எப்போதும் அதிகரித்ததில்லை என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பல ஊர்களில் பொது மக்கள் தங்களுக்கு விருப்பமான சைக்கிளுக்கு முன் பதிவு செய்துவிட்டு காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளதாக அச்சங்கம் கூறியுள்ளது. கொரோனாவை தொடர்ந்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
பொது முடக்க காலத்தில் வருவாய் குறைந்ததால் பலரும் பைக்குகள், ஸ்கூட்டர்களுக்கு பதிலாக சைக்கிளை பயன்படுத்த தொடங்கியதும் அதற்கான தேவையை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சந்தையில் எழுந்திருக்கும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போது பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி விரைவில் சீராகும் என கூறப்பட்டுள்ளது