பொம்மிடி அருகே குளிக்கும் போது கிணற்றில் மூழ்கிய சிறுவனின் உடல், 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி மாதா கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் ரோகித் (13). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த இவர் நேற்று மாலை தனது சக சிறுவர்களுடன் அருகில் பந்து விளையாடி விட்டு அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.
சிறுவனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் நீச்சல் பழக முயற்சித்ததாக தெரிகின்றது. அப்போது எதிர் பாரத விதமாக ரோகித் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதை பார்த்த சக சிறுவர்கள் சத்தமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மீட்க முயற்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து பாப்பிரெட்டிபட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் 60 அடிக்கு தண்ணீர் இருந்ததாலும், இரவானதாலும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இதே நிலை நீடித்தது.
இதனையடுத்து நீர் மோட்டார் பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் தண்ணீருக்கு அடியில் உள்ளதை பார்க்கும் கண்காணிப்பு கேமராவை நீருக்கு அடியில் செலுத்தி சிறுவன் உடல் உள்ள இடத்தை அடையாளம் கண்டு பிடித்தனர். இதனையடுத்து இரவு முழுவதும் மின்மோட்டர் வைத்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.
தொடர்ந்து தண்ணீர் வடிந்த பிறகு நீரில் ழூழ்கிய சிறுவனின் உடலை சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவனின் உடல், உடல் கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.