துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான DPL கிரிக்கெட் போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தேர்வாகியுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சீனிவாசன். இவர் பி.இ (சிவில்) பட்டதாரி. இவரின் தந்தை மற்றும் தாயார் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். பாட்டி ரங்கம்மாள் அரவணைப்பில் இவர் வளர்ந்து வருகிறார். பள்ளிப்பருவத்தில் இருந்தே இவருக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது.
மாவட்ட மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். இந்திய அணி B அணியில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணிக்காக கலந்துகொண்டு விளையாடியுள்ளார்.
இந்நிலையில், துபாயில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி பி எல் கிரிகெட் பிரிமியர் லீக் போட்டியில் தமிழக அணியில் விளையாட சீனிவாசன் தேர்வாகியுள்ளார். ஆனால் மாற்றுத்திறனாளியான இவருக்கு வேலை இல்லாததால் வருமானம் இன்றி சிரமப்பட்டு வருவதாகவும் துபாய்க்கு செல்வதற்கு பணம் இல்லை எனவும் தெரிவிக்கிறார். மேலும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளதால் மனவேதனைக்கு உள்ளாவதாக குறிப்பிடும் சீனிவாசன், வறுமையில் வாடும் தனக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளி ஆனாலும் சாதிக்க துடிக்கும் இந்த பட்டதாரி இளைஞனுக்கு அரசு உதவ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.