கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 201 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேரிஸ்டோவ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 15 ஓவர்களுக்கு 160 ரன்கள் குவித்தது அவர்களின் பார்ட்னர்ஷிப்.
அரை சதம் கடந்த வார்னர் 52 (40) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதே ஒவரில் 97 (55) ரன்கள் எடுக்க நிலையில் விக்கெட்டை இழந்த பேரிஸ்டோவ் சதத்தை தவறவிட்டார். இதற்கிடையே மணிஷ் பாண்டே வந்த வேகத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தங்கள் பங்கிற்கு சற்று அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 201 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் சிங் 33 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.