ஜிஎஸ்டி கவுன்சிலின் 42ஆவது கூட்டம் காணொளி முறையில் இன்று நடைபெறுகிறது.
நடப்பாண்டில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வருவாய் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ள நிலையில் இத்தொகையை மத்திய அரசு தந்து ஈடு செய்ய வேண்டும் என மாநிலங்கள் கோரியுள்ளன.
இத்தொகையை ரிசர்வ் வங்கியிடம் இருந்து சிறப்புக் கடனாகவோ அல்லது வெளிச் சந்தையிலிருந்தோ திரட்டிக் கொள்ளுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆலோசனை கூறியிருந்தது. மேலும் ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மது புகையிலை போன்ற எதிர்மறைப் பொருட்களுக்கான கூடுதல் வரியை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கும் அதிகமாக வசூலித்து இக்கடனை திரும்ப செலுத்திக் கொள்ளலாம் என கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் இதை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் ஏற்கவில்லை. தங்களுக்கு வரவேண்டிய தொகையை மத்திய அரசுதான் ஏற்பாடு செய்து தரவேண்டும் என அம்மாநிலங்கள் திட்டவட்டமாக கூறிவிட்டன. மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட இழப்பை விதிமுறைகளின்படி தாங்கள் ஈடு செய்யவேண்டிய தேவையில்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அரசியலமைப்பு சாசனப்படி தங்கள் இழப்பை மத்திய அரசுதான் ஈடுசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் உறுதிப்பட கூறுகின்றன. இரு தரப்புக்கும் இடையே நிலவும் கடும் கருத்து வேறுபாடு பெரிய அரசியல் சர்ச்சையாகவும் உருவெடுக்கும் நிலையில் இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் அனல் பறக்கும் வாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோபல் பரிசு எப்படி உருவானது? இதற்கு பின்னால் இப்படியொரு கதையா?