பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அடுத்த ஆண்டில் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான எலோன் மஸ்க், டெஸ்லா என்கிற நிறுவனம் மூலமாக மின்சார வாகனங்களைத் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், டெஸ்லா எப்போது இந்தியாவுக்கு வரத் திட்டம்? என ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘கண்டிப்பாக அடுத்த ஆண்டு’ என எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்திற்காக காத்திருந்ததற்கு நன்றி என்றும் எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வரும் சூழலில், டெஸ்லாவின் வருகைக்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
பெங்களூரில் டெஸ்லாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.