பீகார் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி சார்பில் லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மகாகட்பந்தன் என்கிற பெயரில் மீண்டும் ஒரு முறை மகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகள், இடதுசாரி கட்சிகள் 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கு ஒடுக்கப்படும் 144 தொகுதிகளில், 10 தொகுதிகள் வரை “விகாஸ்ஷீல் இன்ஸான் பார்ட்டி” என்கிற புதிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பதாலும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை லாலு பிரசாத் யாதவின் மகனான,தேஜஸ்வி யாதவ் வழிநடத்தி வருகிறார். அவரே இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். மகா கூட்டணிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் செயல்பட்டு வரும் லோக் ஜனசக்திகட்சி ஆகியவை ஒருங்கிணைந்து மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளன.
இந்த கூட்டணிக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமை வகிக்கிறார் என்றும் மீண்டும் அவரே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். 2015ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக போட்டியிட்டன. இந்த கூட்டணி வெற்றி பெற்று,கூட்டணியின் சார்பாக நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்று தேஜஸ்வி யாதவ்துணை முதல்வரானார்.
பின்னர் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக நிதிஷ்குமார் இந்த கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். தற்போது கொரோனா பரவலை கையாண்டது உள்ளிட்டவைகளால் அரசு மீது அதிருப்தி நிலவுவதால் தங்கள் கூட்டணியே வெல்லும் என மகா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் நம்புகின்றனர்