கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய தோனிக்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இறுதிவரை போராடிய கேப்டன் தோனி 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வழக்கத்தைவிட இந்தப் போட்டியில் அதிக ரன்கள் தோனி ஓடியே எடுத்தார். ஜடேஜாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் நிறைய ரன்கள் ஓடியே எடுக்க உதவினார். துபாய் மைதானத்தில் வெப்பம் அதிக அளவில் காணப்பட்டதால், தோனிக்கு உடலில் நீர் சத்து எளிதில் குறைந்து அவர் மிகவும் அவதிப்பட்டார். மைதானத்தில் சில முறை சோர்ந்து பேட்டை தரையில் வைத்து மூச்சு வாங்கினார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்களும் சற்றே மனம் கலங்கினர். அதனால்தான் தோல்வியை சந்தித்த போதும் தோனிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.
Hats off to @msdhoni bhai..even in this heat keeping for 20 overs and then running (sprinting for his team) lots n lots of respect..now that’s what we call never ever giving up in toughest moments. Giving all in for his team#respect #cricket pic.twitter.com/6hVQ8YvnEF
— Sreesanth (@sreesanth36) October 2, 2020
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த், தோனிக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஹாட்ஸ் ஆப் தோனி.. இந்த சூட்டிலும் 20 ஓவர்கள் கீப்பிங் செய்துள்ளார். அத்துடன் அணிக்காக நிறைய ரன்கள் ஓடி எடுத்துள்ளார். பொறுப்புடன் விளையாடினார். நெருக்கடியான இந்த நேரத்தில் உங்களுக்கான ஆதரவை நாங்கள் எப்போதும் கைவிடமாட்டோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.