பின்னாடி இறங்கி சண்டையிட்டு எந்தப் போரையும் வெல்ல முடியாது என்று தோனியின் கேப்டன்ஸி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 3 போட்டிகளில் 2 இல் தோல்வியடைந்துள்ளது. மேலும் தோனி மீதும் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து “கிரிக்பஸ்” இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள அஜய் ஜடேஜா “நான் மீண்டும் சொல்கிறேன். லெவனில் தோனி களமிறங்கும் முறை எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. பின்னாடி களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்தரமில்லை. போர் முடிவுக்கு வர வேண்டும் வெற்றிப் பெற வேண்டுமென்றால் தலைவன் களமிறங்க வேண்டும்” என்றார்.
மேலும் “கிரிக்கெட்டிலும் யார் முன்னே களமிறங்கி விளையாடுகிறார்களோ அவர்களுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். போரில் உங்களை வெற்றிப்பெற வைக்க கூடிய வீரர்கள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் இப்போது அப்படியொரு நிலை இருப்பதுபோல எனக்கு தெரியவில்லை”
தொடர்ந்து பேசிய அஜய் ஜடேஜா “இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தோனி ஓய்வுப் பெற்றுவிட்டார் தோனி. ஆனால் இப்போதும் சிஎஸ்கேவின் கேப்டனாக தொடர்கிறார். இப்போது தொலைக்காட்சியில் பார்க்கும் குழந்தைகள் இந்த தோனியைதான் நினைவில் வைத்துக்கொள்வார்கள். இது மிகவும் வருத்தப்படக் கூடிய விஷயம்” என்றார்.