கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் ரூ.100 நோட்டையும் வைத்துக் கொடுத்த ஏழை பெண்ணுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கியுள்ளது ஒரு ஐடி நிறுவனம்.
கொச்சியில் சிறிய அளவில் கேட்டரிங் தொழில் நடத்தி வருபவர் மேரி செபாஸ்டியன். இவரது கணவர் படகுகளை பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இருவரின் வேலையும் பாதிக்கப்பட்டது. இதனால் சிறிய அளவில் கடன்களை வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் கேரளாவில் பெய்த கனமழையால் கடலோர பகுதியான செல்லனத்தில் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அப்போது மேரி செபாஸ்டியன் தனது கஷ்டமான சூழ்நிலையிலும் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு பொட்டலங்களை விநியோகித்தார்.
கொரோனா ஊரடங்கால் ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்த மக்கள் இந்த வெள்ளத்தால் மேலும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர். இதை உணர்ந்த மேர் செபாஸ்டியன் அவர்களுக்கு கூடுதல் உதவியாக, தான் வழங்கிய உணவு பொட்டலங்களில் 100 ரூபாய் வைத்து வழங்கினார். இதனால் உணவை பெறும் குடும்பங்கள் அந்த பணத்தில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்ற நல்ல எண்ணத்தில் மேரி இவ்வாறு செய்தார்.
அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் சில உணவு பொட்டலங்களில் 100 ரூபாய் நோட்டை கண்டு அதன் மூலம் மேரி செபாஸ்டியன் செய்த தன்னலமற்ற காரியத்தை அறிந்து கொண்டார். அவரை பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
மேரி செபாஸ்டியனின் இந்த நற்காரியத்தை பாராட்டி ஐபிஎஸ் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனம் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மேரி வீட்டிற்கு சென்று அவரிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.
மேரி செபாஸ்டியனின் இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்த பரிசை வழங்குவதாக ஐபிஎஸ் சாஃப்ட்வேர் நிறுவனம் கூறியுள்ளது.